திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் -கனிமொழி எம்.பி

அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றி மக்களை சென்றடைய திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என ஆலங்குளத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.
ஆலங்குளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார் கனிமொழி எம்.பி. 
ஆலங்குளத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார் கனிமொழி எம்.பி. 

அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றி மக்களை சென்றடைய திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என ஆலங்குளத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஆலங்குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அமைச்சர் மூர்த்தி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் வரவேற்று பேசினார். 

கூட்டத்தில்  திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருக்கக்கூடியவர்கள். தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் பாராட்டக்கூடிய ஆட்சியாக உள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்தபோது, கரோனா பிடியில் தமிழகம் மோசமாக சிக்கியிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் கரோனாவில் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறது. 

சில மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை இருந்தது. அதில் இருந்து விடுவித்து தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக உருவாக்கியது திமுக ஆட்சி. அதிமுக ஆட்சியில் கரோனா காலத்தில் முழு ஊரடங்கால் மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்தனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் கரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கியது திமுக அரசு. பெண்களுக்கு நகர்ப்புற பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதியை தமிழக முதல்வர் கொண்டுவந்தார். 

பெண்கள் திருமணத்துக்கு நிதியுதவி வழங்கியவர் கருணாநிதி. பெண்களுக்கு சுய உதவிக்குழுக்களை உருவாக்கியவர் கருணாநிதி. இலவச சமையல் அடுப்பும் வழங்கினார். கருணாநிதி வழியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஆட்சிக்கு வந்த 4 மாதத்துக்குள் ஆலங்குளத்தில் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ. 11 கோடி ஒதுக்கியது திமுக அரசு. கடையம் பகுதியில் அறநிலையத்துறை சார்பில் ஒரு கல்லூரி அமைக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களின் தேவைகள் எல்லாவற்றையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.  

அரசு திட்டங்களை மக்களிடம் சேர்ப்பவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள். முதல்வரின் திட்டங்கள் மக்களின் வீட்டுக்கு வந்து சேர உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் மீது அரசு மீது கொண்டுள்ள அக்கறையை புரிந்துகொண்டு செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். அரசின் திட்டங்கள் தடையின்றி மக்களை சென்றடைய திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்றார். 

கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜா, எஸ்.பழனி, ரூபி மனோகரன், முன்னாள் எம்பி ராமசுப்பு மற்றும் தொகுதி முழுவதும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com