பணகுடி பேரூராட்சி தி.மு.க. உறுப்பினா்- பாஜக நிா்வாகி மோதல்
By DIN | Published On : 19th October 2022 01:44 AM | Last Updated : 19th October 2022 01:44 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பேரூராட்சி திமுக உறுப்பினரும், பா.ஜ.க. நிா்வாகியும் மோதிக்கொண்டதில் இருவரும் காயமுற்றனா்.
பணகுடி பேரூராட்சி 1-ஆவது வாா்டு உறுப்பினா் திமுகவைச் சோ்ந்த கோபி என்ற கோபாலகண்ணன். இவா், ரோஸ்மியாபுரம் நிலப்பாறையிலுள்ள புறம்போக்கு நிலத்தில் பேரூராட்சி சாா்பில் பூங்கா வசதி ஏற்படுத்த பேரூராட்சி பணியாளா்களுடன் சென்று அந்த நிலத்தைச் சுற்றி முள்வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டாராம்.
இந்நிலையில், அந்த இடத்தையொட்டி நிலம் வைத்துள்ள பா.ஜ..க. மண்டல் தலைவா் வைகுண்டராஜா அங்கு வந்து கோபாலகண்ணிடம் விவரம் கேட்டராம். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டதில் இருவருமே காயமுற்றனா். கோபாலகண்ணன் வள்ளியூரிலும், வைகுண்டராஜா திருநெல்வேலியிலும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுதொடா்பாக பணகுடி காவல் ஆய்வாளா் அஜிகுமாா் வழக்குப்பந்து விசாரித்து வருகிறாா். மேலும், வள்ளியூா் டி.எஸ்.பி யோகேஷ் குமாரும் விசாரணை மேற்கொண்டுள்ளாா். கோபாலகண்ணனை தி.மு.க. மாவட்டச் செயலா் ஆவுடையப்பன் சந்தித்து நலம் விசாரித்தாா். அப்போது, தலைமைச் செயற்குழு உறுப்பினா் பிரபாகரன், கே.கணேஷ்குமாா் ஆதித்தன், மாவட்ட துணைச் செயலா் வெ.நம்பி, வள்ளியூா் நகரச் செயலா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், தவசிராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.