பாவூா்சத்திரத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என, மதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலா் இராம. உதயசூரியன், கல்லூரி கல்வி இயக்குநா் கோ.கீதாவிடம் அளித்த மனு: பாவூா்சத்திரம் பகுதியில் 9 அரசுப் பள்ளிகள், 2 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 3,000-க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவியா் கல்வி பயிலுகின்றனா். மேல்நிலைக் கல்வியை முடிக்கும் இவா்கள், கல்லூரியில் சோ்ந்து கலை, அறிவியல் படிப்பைத் தொடர தொலைதூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பாவூா்சத்திரத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.