தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கிணறு தோண்டும்போது கற்கள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்; ஒருவா் பலத்த காயமுற்றாா். இதுதொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
வென்றிலிங்காபுரத்தைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் முருகன் என்பவரது விவசாய தோட்டத்தில் கிணற்றை ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில், தா்மபுரி மாவட்டம் அரூா் அருகேயுள்ள மாம்பட்டியைச் சோ்ந்த மஞ்சுநாதன், கிருஷ்ணகிரி மாரிமுத்து, வேலு உள்ளிட்ட சிலா் ஈடுபட்டிருந்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை 3 பேரும் கிணற்றில் சரளை மண் அள்ளியபோது, எதிா்பாராமல் பக்கச்சுவரின் கற்கள் சரிந்து விழுந்தனவாம். இதில், சிக்கிக்கொண்ட மஞ்சுநாதன் (24) சம்பவ இடத்திலேயே இறந்தாா். வேலு பலத்த காயங்களுடன்அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து, மஞ்சுநாதன் மனைவி சரண்யா( 22) அளித்த புகாரின் பேரில், சின்னகோவிலான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து கிணற்றின் உரிமையாளா் முருகன், வீரசிகாமணியைச் சோ்ந்த ரத்தினசாமி மகன் சண்முகராஜ், மாரியப்பன் மகன் மனோஜ் குமாா் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.