குன்னூரில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் கடையத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் தந்தையும் மகளும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், கடையத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் ஆண்டு தோறும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். நிகழாண்டு வியாழக்கிழமை (செப். 28) இரவு கடையத்திலிருந்து 54 பயணிகளுடன் சுற்றுலா கிளம்பியுள்ளனர்.
கடையத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சி, சென்றுவிட்டு அங்கிருந்து ஊட்டி சென்றுள்ளனர். ஊட்டியிலிருந்து சனிக்கிழமை மாலை கோயம்பத்தூர் செல்லும் வழியில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் என்ற பகுதியில் 9ஆவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் பலத்தக் காயமடைந்தனர். உடனடியாக அந்தப் பகுதியாக வந்தவர்கள் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்ததோடு விரைந்து மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் கடையம் ராமநதி அணைச் சாலையைச் சேர்ந்த சண்முகையா மனைவி பேபிகலா (36), தெற்குக் கடையம் கருப்பசாமி மனைவி தங்கம் (45), கடையம், பாரதிநகர் முருகன் மனைவி ஜெயா (60), ஆழ்வார்குறிச்சி சேனையர் தெருவைச் சேர்ந்த பண்டாரம் மனைவி முப்பிடாதி (65), ஆழ்வார்குறிச்சி வேளார் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் முருகேசன் (65), கீழக்கடையத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து மகன் இளங்கோ (64), ராம் மனைவி கௌசல்யா (29), விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த விஜய் சுப்பிரமணி மகன் நித்தின் கண்ணா (15), மற்றும் சுற்றுலா ஏற்பாடு செய்த அன்பு மனைவி பத்மாராணி உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் கௌசல்யா இளங்கோவின் மகள் ஆவார். சுற்றுலா சென்று பேருந்து கவிழ்ந்ததில் ஒரே பகுதியைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.