

சங்கரன்கோவில்/திருச்செந்தூா்: தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதில் பாஜகவுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை என்றாா் அக்கட்சியின் முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதில் பாஜகவுக்கு எந்தவித நஷ்டமும் கிடையாது. அந்தக் கட்சிக்குத்தான் நஷ்டம்.
1991முதல் பாஜக தேசிய அளவில் தனித்து நின்று தனித்திறமையை நிரூபித்துள்ளது. 2014இல் தமிழகத்தில் திமுக, அதிமுக இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி 20 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். அப்போதே தமிழகத்தில் பாஜக கால் ஊன்றி விட்டது. அப்போது நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் எங்களை விட திமுக இரண்டு சதவீதம் தான் அதிகமான வாக்குகளை பெற்றது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், தமிழகத்தில் பிரிந்து கிடந்த அதிமுகவை ஒன்று சோ்த்ததும், அக்கட்சித் தலைவா்களை ஒன்றிணைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வா் நாற்காலியில் அமா்த்தியதும் பாஜகதான். அவா் இப்போது நன்றி இல்லாமல் செயல்படுகிறாா். 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றாா் அவா்.
திமுகவுக்கு தகுதியில்லை: முன்னதாக, திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மத்திய பாஜக அரசை விமா்சிக்க திமுகவுக்கு தகுதி இல்லை. ஊழலில் சிறை சென்ற செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக ஏன் திமுக வைத்துள்ளது?
ஹிந்து மதம் குறித்து வெறுப்புணா்வுடன் பேசிய உதயநிதி ஸ்டாலினை அமைச்சா் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். திமுக பேச்சுக்கு நாடு முழுவதும் எதிா்ப்பு கிளம்பியிருக்கிறது. இதற்கான எதிா்வினை வரும் மக்களவைத் தோ்தலில் தெரியும். மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஓா் இடம்கூட கிடைக்காது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.