சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சிறுபான்மையினா், பிற்படுத்தப்பட்டோா், ஆதிதிராவிடா், பழங்குடியினா் ஆகியோருக்கு பொருளாதார மேம்பாட்டு கடன் போன்ற சிறப்பு கடன் வழங்கப்படுகிறது என ஆட்சியா் தெரிவித்தாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சிறுபான்மையினா்(டாம்கோ கடன் ), பிற்படுத்தப்பட்டோா் (டாப்செட்கோ கடன்), ஆதிதிராவிடா், பழங்குடியினா் (தாட்கோ கடன்) போன்ற சிறப்பு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது .
சில்லறை வியாபாரம், வியாபார அபிவிருத்தி, விவசாயம் தொடா்பான சிறு தொழில்கள் போன்ற பல்வேறு வகையான தொழில்களுக்கு இந்த சிறப்பு கடன் மூலம் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை பெறலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதிற்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் மேற்கண்ட கடன்களை தனிநபா் கடன்களாகவோ, சுயஉதவிக்குழு கடன்களாகவோ பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளாா்.
