நெல்லையில் குவியும் குப்பை: தவிக்கும் மக்கள்

திருநெல்வேலி, மே 29: திருநெல்வேலி மாநகர் பகுதியில் குப்பைகள் முறையாக அள்ளப்படாததால், ஆங்காங்கு குவியல் குவியலாகக் காட்சியளிக்கின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக
Updated on
2 min read

திருநெல்வேலி, மே 29: திருநெல்வேலி மாநகர் பகுதியில் குப்பைகள் முறையாக அள்ளப்படாததால், ஆங்காங்கு குவியல் குவியலாகக் காட்சியளிக்கின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 இம் மாநகரை சுற்றி தகவல் தொழில்நுட்ப பூங்கா உள்பட பல தொழில் அமைப்புகள் கால் பதிக்கத் தொடங்கியுள்ளன.

 இதனால், மாநகரம் எல்லையை தாண்டி விரிவடைந்து கொண்டிருக்கிறது. தற்போது இங்கு குடியேருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 ஆனால், மாநகரில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகள் போதுமானதாக இல்லை. சுகாதாரப் பிரச்னையும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

 மாநகர் பகுதியில் ஒரு நாளைக்கு 110 டன் குப்பைகள் குவிகின்றன. விழாக்காலங்களில் 130 டன் வரை குப்பைகள் குவிகின்றன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

 இம் மாநகர் பகுதியில் சுமார் 4.25 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் 1,000 பேருக்கு ஒரு துப்புரவு பணியாளர் என்ற ரீதியில் இருக்க வேண்டும் என்பது மாநகராட்சி விதிமுறை. ஆனால், தற்போது 2,500 பேருக்கு ஒரு துப்பரவு பணியாளர் என்ற கணக்கில் கூட பணியாளர்கள் இல்லை.

 மாநகராட்சியில் 846 துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் உள்ளன. ஆனால், பணியில் 620 பேர் மட்டுமே உள்ளனர். நகரின் மக்கள்தொகை கணக்குப்படி சுமார் 1,600 துப்புரவுப் பணியாளர்கள் தேவை.

 மக்கள்தொகை பெருக்கத்தால் 2 ஆண்டுகளுக்குள் குப்பைகளின் அளவு 5 சதம் அதிகரிக்கிறது.

 10 ஆண்டுகளாக துப்புரவுப் பணியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், மாநகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முடியாததற்கும், மலை போல குவியும் குப்பைகளை முறையாக அகற்றாததற்கும் பணியாளர்கள் பற்றாக்குறையும் முக்கிய காரணம்.

 துப்புரவுப் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் சரியாக கண்காணிப்பதும் இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. சில தெருக்களில் விழாக் காலங்களில் மட்டுமே துப்புரவுப் பணி நடைபெறுவதாக மக்கள் குறை கூறுகின்றனர்.

 குப்பைகளை அள்ள 5 கண்டெய்னர் லாரிகள், 20 லாரிகள், 3 சுமை ஆட்டோக்கள், 250 டிரை சைக்கிள்கள் உள்ளன. இவற்றை பராமரிக்க சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தனியாக ஒரு இளநிலை பொறியாளர் இருந்தார். பழுதாகும் வாகனங்கள் உடனுக்குடன் பழுது நீக்கப்பட்டன.

 ஆனால், இப்போது தனியாக இளநிலை பொறியாளர் இல்லை. இதனால், வாகனங்களை பழுதுநீக்க காலதாமதம் ஆவதாக மாநகராட்சி ஊழியர்கள் புகார் கூறுகின்றனர்.

 கடந்த ஒரு மாதமாக 7 வாகனங்கள், 25 டிரை சைக்கிள்கள் மாநகராட்சி அலுவலகங்களில் பழுதாகி நிற்கின்றன. குப்பைகளை எடுத்துச் செல்வதில் ஏற்படும் தாமதத்துக்கு இதுவும் ஒரு காரணம்.

 இந்த இரு பிரச்னைகளாலும் துப்புரவுப் பணியில் தினமும் 50 சதவிகிதம் வரை பணிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

 மேலும், குப்பைகள் சரியான முறையில் அள்ளாமல் இருப்பதால், அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 மாநகராட்சி நிர்வாகம் தேவையான துப்புரவுப் பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். அனைத்துப் பகுதியிலும் துப்புரவுப் பணி சரியாக நடைபெறுகிறதா என கண்காணிக்க வேண்டும். குப்பைகளை அள்ளிச் செல்லும் வாகனங்கள் உடனடியாக பழுது நீக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் த. மோகனிடம் கேட்டபோது கூறியதாவது:

 துப்புரவுப் பணியால் ஏற்படும் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் பணியாளர் பற்றாக்குறை. துப்புரவுப் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் நிலைமை சீரடையும் என்றார் மோகன்.

 வி.ஐ.பி.களுக்குத்தான் முக்கியத்துவம்

 திருநெல்வேலி மாநகர் பகுதியில் துப்பரவுப் பணியாளர் பற்றாக்குறை, வாகனங்கள் பழுது என துப்புரவுப் பணி பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், துப்புரவுப் பணியாளர்கள் பாரபட்சமாக

 செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

 மாநகரில் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் வசிக்கும் பகுதி, உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் வசிக்கும் பகுதி, ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகிய பகுதிகளில் துப்புரவுப் பணியாளர்கள் தினமும் மிகவும் கரிசனத்தோடு பணி செய்கின்றனர். இதற்காக சில துப்புரவுப் பணியாளர்கள், அவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்கின்றனர்.

 ஆனால், சாதாரண மக்கள் வசிக்கும் பகுதியிலும், குடியிருப்பு பகுதியிலும் துப்புரவுப் பணியாளர்கள் சரியாக துப்புரவுப் பணியில் ஈடுபடுவதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com