40 வயதைக் கடந்தவர்களுக்கு இருக்கும் இடது கை உளைச்சல், நெஞ்சு எரிச்சல் போன்றவையும் இதய நோய்களுக்கான அறிகுறிகள்தான் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
உலக இருதய தினத்தையொட்டி மாவட்ட அறிவியல் மையம், அருணா கார்டியார்டிக் மருத்துவமனை, மேக்ஸ் ஜோன்ஸ் தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் இதயவியல் நிபுணர் இ.அருணாசலம் கூறியதாவது:
உலக இருதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதயத்துக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல் என்ற தலைப்பில் நிகழாண்டில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாரடைப்பு ஏற்படுவோரை ஒரு மணி நேரத்துக்குள் சரியான மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தால் எளிதில் குணமாக்க முடியும்.
இந்த நேரத்தை கோல்டன் ஹவர் என்று மருத்துவத் துறையில் அழைக்கிறார்கள். இதுகுறித்த விழிப்புணர்வு இந்தியாவில் போதுமான அளவுக்கு இல்லாமல் உள்ளது. இதய நோய்கள் வராமல் தடுக்க பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நடைப் பயிற்சியைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். புகைப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். டிவி பார்க்கும் பழக்கத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். தினை மாவு, பயறு வகைகள், காய்கனிகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். முன்பு போல மாரடைப்பு என்பது நெஞ்சில் அதிக வலியோடு வருவதில்லை. ஏனெனில் சர்க்கரை நோயின் பாதிப்பால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர் நெஞ்சு எரிச்சல் இருந்தாலே அது மாரடைப்பாக மாற வாய்ப்புள்ளது.
இதேபோல தங்களது சந்ததியில் யாருக்காவது மாரடைப்பு வந்திருக்குமானால் 40 வயதைக் கடந்த ஆண்களும்,50 வயதைக் கடந்த பெண்களும் இடது கைகளில் உளைச்சல் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி ஈ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகளை எடுக்க வேண்டும். ஏனெனில் இடது கை உளைச்சலும் கூட இதய நோய்களுக்கு அறிகுறிதான் என்றார் அவர்.
மாவட்ட அறிவியல் அலுவலர் கே.நவராம்குமார், மேக்ஸ் ஜோன்ஸ் தொண்டு நிறுவன அறங்காவலர் அந்தோணி, மாணவர்-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.