கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமத்துவ மக்கள் கழகத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக் கூட்டத்துக்கு, அமைப்பின் நிறுவனர்- தலைவர் ஏ. நாராயணன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் டி.ஆர். சந்திரசேகரன், துணைத் தலைவர் டி. தனுஷ்கோடி, துணைப்பொதுச் செயலர்கள் கு. இளஞ்சேரன், ஷாநவாஸ், பொருளாளர் எம். கண்ணன், இளைஞரணிச் செயலர் கே.எஸ்.ஆர். பிரபு, தலைமை நிலையச் செயலர் தங்கமுத்து, அமைப்புச் செயலர் எஸ். கணேசன், தொழிற்சங்க செயலர் ஜெயராஜ்டேவிட், திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலர் அகரகட்டு லூர்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்: தென்காசி தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும். மருத்துவர் மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். பனையில் இருந்து நீரா பானம் இறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். மக்கள் வாழ்வாதாரம், விவசாயம் பாதிக்காத வகையில் சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வற்றாத ஜீவநதியான தாமிரவருணி நதியை பாதுகாக்க தூய்மை திட்டத்தில் பணி மேற்கொள்ள வேண்டும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள், விவசாயிகள் நலன் கருதி தாமிரவருணி நதி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
சென்னை-குமரி இடையே இரட்டை ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். தென்மாவட்டங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் திருநெல்வேலியை மையமாக கொண்டும் தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டும். 2019 இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







