பல துறைகள் சார்ந்த அறிவே மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்றார் பெங்களூரு தேசியத் தர மதிப்பீட்டுக் கல்விக் குழுவின் துணை ஆலோசகர் பி.எஸ்.பொன்முடிராஜ்.
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி அகத்தர மதிப்பீட்டு உறுதிக் குழுவின் சார்பில் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் 3 நாள்கள் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் மு. முஹம்மது சாதிக் பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்து தலைமை உரையாற்றினார். அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் ஏ. அப்துல் காதர் வாழ்த்திப் பேசினார்.
அகத்தர மதிப்பீட்டு உறுதிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் செய்யது முஹம்மது அறிமுக உரையாற்றினார். கலைப்புல முதன்மையர் ச.மகாதேவன், அறிவியல் புல முதன்மையர் சே.மு. அப்துல்காதர், என்ஐஆர்எப் ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத் துறைத் தலைவருமான எஸ். முகம்மது ஹனீப், கல்லூரித் தேர்வாணையர் எஸ்.ஹெச். முஹம்மது அமீன், ஆய்வுத்துறை ஒருங்கிணைப்பாளர் வி.சி. சின்ன தம்பி, நிதிக் காப்பாளர் அ. ஹாமில், நிர்வாக ஆலோசகர் பி.ஏ. அப்துல் கரீம் ஆகியோர் நோக்க உரையாற்றினர்.
மூன்றாவது நாள் நிகழ்ச்சியில், பெங்களூரு தேசியத் தர மதிப்பீட்டுக் கல்விக்குழுவின் (நாக்) துணை ஆலோசகர் பி.எஸ்.பொன்முடிராஜ், தேசியத் தர மதிப்பீட்டுக்கு எவ்வாறு தயாராவது என்ற தலைப்பில் பேசியதாவது:
இந்தியாவிலுள்ள 60 ஆயிரம் கல்வி நிறுவனங்களில் இன்னும் 36 ஆயிரம் கல்வி நிறுவனங்களுக்குத் தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் மதிப்பீடு அளிக்க வேண்டியுள்ளது.
தரமான கல்வியை வழங்கினால் நாக் தரமான மதிப்பீட்டை வழங்கும். ஆசிரியர்கள் மாதத்திற்கு ஒரு ஆய்வுக் கட்டுரை வழங்கினால் கூட 200 ஆசிரியர்கள் கொண்ட கல்லூரியால் ஆண்டுக்கு 2,400 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட முடியும். பயிற்றுவித்தல், மாணவர்களை ஊக்குவித்தல், ஆராய்ச்சி செய்தல், அவர்களை வேலை பெறுவதற்குத் தகுதியாக்குதல் எனும் நோக்கங்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் இயங்க வேண்டும்.
பல துறைகளைத் தன் படிப்போடு இணைத்து அறியும் கல்வியறிவே மாணவர்களின் இன்றைய வளர்ச்சிக்கு உதவும். நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் சந்திரசேகர் மற்றும் கூகுள் சுந்தர் பிச்சை அது போலவே பல்துறை அறிவால் உருவானார்கள். தொழில்நுட்பக் கண்டுப்பிடிப்புகளை உருவாக்கும் மாணவர்களை உருவாக்குங்கள். மாணவர்களின் அறிவுசார் சுதந்திரம் பல புதுமைகளை நிகழ்த்த வைக்கிறது.
மக்கள் உங்கள் கல்லூரி குறித்து உயர்வாகப் பேசக் காரணம் உங்கள் கல்லூரியின் தரம். எனவே தரத்தில் கவனமாக இருங்கள்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிலிருந்து வல்லுநர்களை அழைத்துப் பேச வையுங்கள். தினந்தோறும் கற்றுத்தரும் ஆசிரியர் தினந்தோறும் கற்கும் மாணவர்களை உருவாக்க வேண்டும்.
ஒரு பாடத்தைப் படிப்பதனால் மாணவர்களால் என்னென்ன செய்ய முடியும் என்று மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். மாணவர்களுக்குத் திறன் வளர்க்க மத்திய அரசு நிறைய நிதியுதவி செய்கிறது. பல தரவுகளின் அடிப்படையில் தர மதிப்பீட்டினை நாக் வழங்குகிறது என்றார்.
அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் ஏ.அப்துல் காதர் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.