நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு
By DIN | Published On : 12th April 2019 09:55 AM | Last Updated : 12th April 2019 09:55 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் நான்குமுனை சந்திப்பில் இளைஞரை அரிவாளால் மர்மகும்பல் வியாழக்கிழமை அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு அரசு பேருந்து வியாழக்கிழமை காலையில் புறப்பட்டது.
பேருந்தில் 40 க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். தெற்குப்புறவழிச்சாலையில் மேலப்பாளையம் நான்குமுனை சந்திப்பைக் கடந்தபோது இளைஞர் ஒருவர் திடீரென பேருந்தில் இருந்து குதித்து ஓடினாராம். அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அந்த இளைஞரை அரிவாளால் வெட்டினராம். மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பொதுமக்களும், போக்குவரத்து போலீஸாரும் மர்ம நபர்களை மடக்கினர். அதில் ஒருவர் மட்டும் போலீஸாரின் பிடியில் சிக்கினார்.
விசாரணையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த இருதயராஜ் மகன் வினோத்குமார் (23). எட்டயபுரத்தைச் சேர்ந்த மதபோதகர் ஜேசுவா. இருவரும் நண்பர்கள். கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை ஜேசுவா பாலியல் வன்கொடுமை செய்ததோடு, நகையைப்பறித்து மிரட்டியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையை அடுத்து புகார் அளித்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செதுத கொண்டார். மாணவியை மிரட்டிய வழக்கில் வினோத்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்காக வினோத்குமார் வந்தபோது, மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியின் சகோதரரும், அவரது நண்பர்களும் சேர்ந்து வினோத்குமாரை வெட்டியதாகக் கூறப்படுகிறது. பிடிபட்ட பாப்பான்குளத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனிடம் (27) போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.