திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே உள்ள கோதண்டராமபுரத்தில் மதுபோதையில் நாயை வெட்டிக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கடையம் அருகே உள்ள கோதண்டராமபுரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் பால்நாடார் மகன் ராமச்சந்திரன் (33). இவர் கடையத்தில் எலுமிச்சை தரகு மண்டி நடத்தி வருகிறார். ராமச்சந்திரனின் உறவினர் கோதண்டராமபுரம் கீழத் தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் ராஜ் (23), ராமச்சந்திரனை தேடி அவரது வீட்டிற்கு வந்தாராம். அப்போது அங்கு கட்டிவைக்கப்பட்டிருந்த நாய் ராஜை பார்த்துக் குரைத்ததாம். மதுபோதையில் இருந்த ராஜ், அரிவாளால் நாயை வெட்டியதில், அது உயிரிழந்தது.
இதுகுறித்து ராமச்சந்திரன் கடையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் வழக்குப் பதிவுசெய்து ராஜை கைது செய்தார்.