மக்களவைத் தேர்தலையொட்டி ஆலங்குளம் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ஆலங்குளத்தில் டி.எஸ்.பி. சுபாஷினி தலைமையில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க உதவி செய்யவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபடவும், வாக்களிக்க வரும் வாக்காளர்களை அரசியல் கட்சியினர் எந்த வகையிலும் இடையூறு செய்யாமல் இருக்கவும் போலீஸார் கவனமாக இருக்க டி.எஸ்.பி அறிவுறுத்தினார்.
கடையநல்லூர்: கடையநல்லூரில் புளியங்குடி டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு, கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி, தென்காசி, மதுரை பிரதான சாலை வழியாகச் சென்று, கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் அருகே நிறைவடைந்தது. இதில், கடையநல்லூர் காவல் ஆய்வாளர் கோவிந்தன் மற்றும் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பங்கேற்றனர்.
புளியங்குடி: புளியங்குடியில் காவல் துணை கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இதில், புளியங்குடி காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், கடையநல்லூர் ஆய்வாளர் கோவிந்தன், உதவி ஆய்வாளர்கள் முத்துகிருஷ்ணன், சுமதி மற்றும் ஆர்பிஎஃப் வீரர்கள், உள்ளூர் போலீஸார் கலந்துகொண்டனர்.
பேருந்து நிலையம் முன்பிருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.