விஸ்வநாதப்பேரி திரெளபதியம்மன் கோயிலில் ஆடி மக மகோத்ஸவம் கொடியேற்றம்
By DIN | Published On : 04th August 2019 01:32 AM | Last Updated : 04th August 2019 01:32 AM | அ+அ அ- |

சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதப்பேரி அருள்மிகு ஸ்ரீதிரெளபதியம்மன் கோயிலில் ஆடி மக மகோத்ஸவம் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஆடி மக மகோத்ஸவம் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இவ்விழாவையொட்டி சனிக்கிழமை (ஆக. 3) அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 3 மணிக்கு அனுக்ஞை, திரெளபதியம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து, கோயில் மருளாடிகளால் கொடிப்பட்டம் ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, பின்னர் கோயிலை வந்தடைந்தது. அங்கு தர்ப்பைப் புல், பட்டாடை உள்ளிட்ட பொருள்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, கொடியேற்றப்பட்டது. பின்னர், தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கொடிப்பட்ட உபயதாரர் கி. ராஜசேகர்நாயுடு-ஜமுனா, திருக்கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு ) ந. யக்ஞநாராயணன், விழாக் கமிட்டியார் பி. மாரியப்பன்ஆசாரி, ஆர். சுப்புலட்சுமி, ஏ.எஸ். குருசாமி, ஜி. ராஜாராம், முத்துச்சாமி, பாலசுப்பிரமணியன், சமுத்திரம், தவிடன், ப. பொன்னுச்சாமி, ராதாகிருஷ்ணன், கோயில் பூசாரி மணிகண்டன், மருளாடிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, விழா ஒருங்கிணைப்பாளர் எஸ். ராமராஜ் செய்திருந்தார். மாலை 6 மணிக்கு 1ஆம் திருநாள் நிகழ்வாக, விஸ்வகர்ம சமுதாயத்தினரின் சக்தி கும்பம் நடைபெற்றது. தொடர்ந்து, 8ஆம் திருநாள்(ஆக. 10) வரை தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர் சார்பில் திருக்கல்யாணம், கனி பறித்தல், அர்ச்சுனன் தவசு, பூப்பறித்தல், அரவான் களப்பொலி, துச்சாதனன் பலி வாங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா 9ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக. 11) மாலை 6 மணிக்கு நடைபெறும். ஆக. 12இல் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது.