சேரன்மகாதேவியில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான மாவட்ட அளவிலான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சேரன்மகாதேவி ருக்மணி குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளை சார்பில், கிராமப்புறம் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களிடையே செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை, திருநெல்வேலி சிட்டி செஸ் அசோசியேசன் செயலர் கருணாகரன் தொடங்கிவைத்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து கலந்து கொண்ட 200 மாணவர்களிடையே 8,9,10,11,12,13 மற்றும்17 வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 8 வயது பிரிவில் ஜாம் ஜெப்ரி, அஜிஸ்ரீ ஆகியோரும், 9 வயது பிரிவில் யுவராஜா, பார்வதி ஆகியோரும் 10 வயது பிரிவில் கெளதம்திலீபன், மோகனாதேவி ஆகியோரும், 11 வயது பிரிவில் செல்வசக்தி, ஜனனிஆகியோரும், 12 வயது பிரிவில் சுதன், மரியதரன்யா ஆகியோரும், 13 வயது பிரிவில் சிவராமச்சந்திரன், இலக்கியசெல்வி ஆகியோரும், 17 வயது பிரிவில் மணிகண்டபிரபு, கெலினா ஷாரோன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சேரன்மகாதேவி கமிட்டி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன், தென்காசி நகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ஜேனட் மற்றும் செல்வம், ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். ஐபிஎல் செஸ் அகாதெமி இயக்குநர் கண்ணன் போட்டியின் நடுவராகவும், இசக்கி, அருண், வைதேகி ஆகியோர்துணை நடுவர்களாகவும் இருந்தனர்.
ஏற்பாடுகளை ருக்மணி குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அறக்கட்டளை நிர்வாகிகள் கோமதி மற்றும் ஆனந்தி ஆகியோர் செய்திருந்தனர்.