சங்கரன்கோவிலில் 22 நாள்களாகியும் குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெண்கள் மறியல்
By DIN | Published On : 05th May 2019 03:08 AM | Last Updated : 05th May 2019 03:08 AM | அ+அ அ- |

சங்கரன்கோவிலில் 22 நாள்களாகியும் குடிநீர் வழங்காததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில் 3 ஆவது வார்டில் உள்ள கோமதியாபுரம் புது 2 ஆம் தெரு மற்றும் 3 ஆம் தெருக்களில் கடந்த 22 நாள்களாகியும் குடிநீர் விநியோகிக்கப்படவில்லையாம். லாரிகள் மூலமும் அந்தப் பகுதியில் குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுமார் 50 பேர் சனிக்கிழமை மாலை ராஜபாளையம் சாலையில் உள்ள நீரேற்றுநிலையத்தை முற்றுகையிட வந்தனர்.பின்னர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் சுமார் 10 நிமிடம் தொடர்ந்து நடைபெற்றது.
தகவலறிந்ததும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீஸார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 22 நாளாகியும் குடிநீர் வழங்காததைச் சுட்டிக் காட்டியதோடு, நீரேற்று நிலையத்திற்கு சென்று குடிநீர் வழங்காதது குறித்துக் கேட்டால், தவறாகப் பேசுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் குற்றஞ்சாட்டினர். இதைத்தொடர்ந்து நீரேற்றுநிலையத்துக்கு தண்ணீர் வந்ததும் உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.