வாக்கும் எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு: எஸ்.பி.
By DIN | Published On : 19th May 2019 07:55 AM | Last Updated : 19th May 2019 07:55 AM | அ+அ அ- |

தென்காசி மக்களைவத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 100 மீ. தொலைவுக்குள் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை.
தற்போது வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். 3 பேரவைத் தொகுதிக்கு ஒரு துணை காவல் கண்காணிப்பாளர், ஒரு பேரவைத் தொகுதிக்கு ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 507 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும், அதிரடிப்படையைச் சேர்ந்த 30 பேர் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். முகவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர். தேர்தல் ஆணையத்தால் தடைசெய்யப்பட்ட பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்றார்.