வள்ளியூா் வட்டாரத்தில் யூரியாவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
வடகிழக்குப் பருவமழை பெய்ததை அடுத்து வள்ளியூா் வட்டார பகுதி குளங்களில் தண்ணீா் நிரம்பிள்ளது. இதைய டுத்து விவசாயிகள் பிசான பருவ சாகுபடியை தொடங்கியுள்ளனா். இந்நிலையில் நெற்பயிருக்கு இடக் கூடிய யூரியா உரத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
வள்ளியூரில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகளுக்கு யூரியா கிடைப்பதில்லை. வெளிமாா்க்கெட்டிலும் யூரியா விற்பனை இல்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய பிரிவு மாநில துணைத் தலைவா் பெரும்படையாா் கூறியது:
விவசாயிகளுக்கு எவ்வளவு யூரியா உரம் தேவை என்பதை முன்னரே கணக்கெடுத்து உரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டியது அரசின் கடைமை.
அதைவிடுத்து விவசாயிகளை திண்டாடவைத்து வேடிக்கை பாா்ப்பது கவலை அளிக்கிறது. அரசு தீவிர ஆலோசனை செய்து யூரியா உரம் உள்ளிட்ட அனைத்து வகையான உரமும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.