திருக்குறுங்குடியில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிக் காயப்படுத்திய சக ஆட்டோ ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
திருக்குறுங்குடி அருகேயுள்ள நம்பித்தலைவன்பட்டயத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஹரிஹரன் (28). இவர், திருக்குறுங்குடியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஆட்டோ நிறுத்தத்தில் பயணிகளை ஆட்டோவில் ஏற்றியபோது, இவருக்கும், சக ஓட்டுநரான திருக்குறுங்குடி சாலைத் தெருவைச் சேர்ந்த சாமுவேல் முத்துப்பாண்டி மகன் துரைக்கும் (30) இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, துரை திடீரென பாட்டிலால் ஹரிஹரனை தாக்கிக் காயப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், திருக்குறுங்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.