ஆடி அமாவாசைக்கு தாமிரபரணில் தர்ப்பணம் செய்யத் தடை விதிக்கப்பட்டதையடுத்து தாமிரவருணி படித்துறைகள் மற்றும் பாபநாசம்
வெறிச்சோடியது.
தாமிரவருணி நதியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்நிலையில் மார்ச் 24 முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து கோயில்களும் மூடப்பட்டு வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பாபநாசத்தின் சிறப்பு வாய்ந்த திருவிழாவான சித்திரைத் திருவிழா நடைபெறவில்லை.
நாள்தோறும் கோயில் பணியாளர்களை வைத்து ஐந்து வேளை பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. ஆடி அமாவாசை நாளான இன்று தாமிரவருணியில் நீராட மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்ததை அடுத்து இன்று பாபநாசத்திற்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால் பாபநாசம் வெறிச்சோடியது. பாபநாசம் கோயில் படித்துறை பொதுமக்கள் இன்றி வெறுமையாக காணப்பட்டது.
மேலும் பாபநாசம் மலையில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா தடை செய்யப்பட்டதால் சொரி முத்து அய்யனார் கோயில் பகுதியில் பொதுமக்கள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது. பாபநாசம் கோவில் மற்றும் டானா பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆடி அமாவாசை அன்று புனித நதியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது பொதுமக்களின் நீண்டநாள் நம்பிக்கையாக உள்ள நிலையில் இந்த ஆண்டு ஆடி அமாவாசைக்கு புனித நதிகளில் நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும் பக்தர்களும் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.