கரோனா பொதுமுடக்கம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி படித்துறைகளில் ஆடிஅமாவாசையொட்டி திங்கள்கிழமை முன்னோர்களுக்கான வழிபாடுகளை நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் வழக்கமாக கூட்ட நெரிசலால் திணறும் படித்துறைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழகத்தில் ஆடி மற்றும் தை அமாவாசை நாள்களில் நதிகளின் கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நோய்கள் நீங்கி வளமான வாழ்வுக்கு வழிபிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி கரையோரம் உள்ள ஏராளமான படித்துறைகளில் முன்னோர் வழிபாடு நடைபெறும். திருநெல்வேலி மாநகரில் குறுக்குத்துறை, வண்ணார்பேட்டை பேராட்சியம்மன் கோயில் திடல், மணிமூர்த்தீஸ்வரம், அருகன்குளம், சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் நதியில் நீராடி முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவார்கள்.
ஆனால், நிகழாண்டில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும், மக்கள் ஒரே இடத்தில் அதிகளவில் கூடும்போது நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாலும் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி படித்துறைகளில் ஆடிஅமாவாசை வழிபாடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் திங்கள்கிழமை காலை முதல் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. படித்துறைகளில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பலர் தங்களது வீடுகளிலேயே முன்னோர்களை எண்ணி வழிபாடு செய்து மொட்டை மாடிகளில் காகங்களுக்கு உணவு அளித்தனர்.