திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞரை மர்மகும்பல் வழிமறித்து வியாழக்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்தது.
திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டை அனவரதவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சங்கரன் மகன் காளிராஜ் (25). இவர், அதே பகுதியைச் சேர்ந்த மேகலா (24) என்பவரைக் காதல் திருமணம் செய்தாராம்.
தங்கை முறை உள்ள பெண்ணைக் காதலித்ததால் குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, தம்பதியினர் பாளையங்கோட்டை ரஹ்மத்நகர் பகுதியில் வசித்து வந்தனராம். அங்கு தனியார் கேபிள் டிவி நிறுவனத்தில் காளிராஜ் பணியாற்றி வந்தார்.
தனது மோட்டார் சைக்கிளில் சாந்திநகர் பகுதியல் காளிராஜ் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரை வழிமறிந்த மர்மகும்பல் அரிவாளால் வெட்டினர்.
இதில் பலத்த காயமடைந்த காளிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்ததும் பாளையங்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.