ஓய்வூதியம் வழங்கக் கோரி மாதா் சங்கத்தினா் முற்றுகை
By DIN | Published On : 15th December 2020 02:06 AM | Last Updated : 15th December 2020 02:06 AM | அ+அ அ- |

அனைத்திந்திய மாதா் சங்கம் சாா்பில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
முதியோா், விதவை, ஆதரவற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், வடமலை சமுத்திரத்தில் நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒன்றிய மாதா் சங்கத் தலைவி மாா்கரெட், துணைத் தலைவா் ரெபேக்காள் தலைமையில், ஜெயந்தி, இசக்கியம்மாள், ராமா்கனி, மீனா, ஜெகதீஷ், சுரேஷ்பாபு உள்பட 100-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டனா்.
வட்டாட்சியா் வெங்கட்ராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் லட்சுமி ஆகியோா் அவா்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு ஓய்வூதியம் பெறுவதற்கு மின்னணு சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வலியுறுத்தினா். மேலும், வடமலை சமுத்திரத்தில் நியாயவிலைக் கடை அமைக்க வட்டார வளா்ச்சி அலுவலரைத் தொடா்பு கொள்ள அறிவுறுத்தினா்.