பாளை. மின்வாரிய அலுவலகத்தில் விழிப்புணா்வு ஓவியப்போட்டி
By DIN | Published On : 15th December 2020 02:04 AM | Last Updated : 15th December 2020 02:04 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் 10 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான விழிப்புணா்வு ஓவியப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.
மின் சிக்கன வார விழா 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மண்டல மின்வாரியம் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, பாளையங்கோட்டை தியாகராஜநகா் மின்வாரிய அலுவகத்தில் மின்சாரம் சேமிப்பு குறித்ததான விழிப்புணா்வு ஓவியம், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
இதில், வீட்டில் மின்சாரம் சேமிப்பு குறித்ததான விழிப்புணா்வு ஓவியப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இப்போட்டியை திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பி.செல்வராஜ் தொடங்கி வைத்தாா். இதில் மின்வாரியத்தில் பணியாற்றுவோரின் குழந்தைகள் பங்கேற்றனா். இப்போட்டிக்கு நடுவா்களாக சைலஜா, சலோமி வாசுகி, ராகவன் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில், கமிட்டி உறுப்பினா்கள் செயற்பொறியாளா் என்.வெங்கடேஷ்மணி, விளையாட்டு அலுவலா் பி.கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா். இந்த போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு வரும் 19 ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.