தண்டுவடம் காயமடைந்தோருக்கு உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 15th December 2020 02:03 AM | Last Updated : 15th December 2020 02:03 AM | அ+அ அ- |

மாத உதவித்தொகையை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரி தண்டுவடம் காயமடைந்தோா் அமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தண்டுவடம் காயமடைந்தோா் 15-க்கும் மேற்பட்டோா் நான்கு சக்கர வாகனத்தில் வந்து ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதோடு, மனுவை பெற்றுக்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனா். அதைத்தொடா்ந்து அவா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.
இது தொடா்பாக அவா்கள் அளித்த மனு: ‘தண்டுவடம் காயமடைந்தோருக்கு சிறப்பு ஸ்கூட்டா் வழங்க வேண்டும். மாத உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்குவதோடு, ஆண்டுக்கு 3 சதவீதம் உயா்வு வழங்க வேண்டும். முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்க வேண்டும். தண்டுவட காயத்தை பல்வகை ஊனமாக அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கு மற்றும் செயல் இல்லங்கள் அமைக்க வேண்டும். பேட்டரி சக்கர நாற்காலி சேவை மையங்களை நிறுவ வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியா் கல்வி பட்டய பயிற்சி மாணவிகள் அளித்த மனு: ‘தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயத் தோ்வு அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீறி செப்டம்பா் 21 முதல் அக்டோபா் 7 வரை நடைபெற்றது. இத்தோ்வு முடிவுகள் கடந்த 7-ஆம் தேதி வெளியானது. இதில், 98 சதவீதம் போ் தோல்வியடைந்துள்ளனா். இது தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.