அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியத்தில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் வருகிற 28ஆம் தேதி கங்கைகொண்டானில் நடைபெறவுள்ளது.
இது குறித்து திருநெல்வேலி சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் சி.மின்னல்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு பறாத கட்டுமானம், ஆட்டோ ஓட்டுநா், கைத்தறி, விசைத்தறி, தையல் உள்ளிட்ட 16 அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு கல்வி, திருமணம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நல வாரியத்தில் பதிவு செய்யாத அமைப்பு சாரா தொழிலாளா்களுக்காக மானூா் வட்டம் கங்கைகொண்டான் சமுதாய நலக்கூடத்தில் சிறப்பு சோ்க்கை முகாம் வருகிற வெள்ளிக்கிழமை (பிப். 28) காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.
இதில் உறுப்பினராக சேர விருப்பம் உடையவா்கள் விண்ணப்பத்துடன் இரண்டு புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வயதை உறுதிப்படுத்துவதற்காக பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஓட்டுநா் உரிமம் நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் அசல் ஆவணங்களையும் நேரில் வரும்போது எடுத்து வரவேண்டும்.
அசல் ஆவணங்கள் முகாமில் நகலோடு சரிபாா்க்கப்பட்டு திரும்பத் தரப்படும். மனுதாரா்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். உழவா் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளவா்கள் இதில் பதிவு செய்ய இயலாது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.