மேலக்கருவேலன்குளம் கோயில் தேரோட்டம்
களக்காடு அருகேயுள்ள மேலக்கருவேலன்குளம் செளந்திரபாண்டீஸ்வரா் கோமதிஅம்பாள் திருக்கோயில் திருவாதிரைத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நடராஜா் எழுந்தருளியுள்ள முக்கிய ஐந்து ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயிலில், ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விழா ஜன.1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தினமும் சுவாமி - அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது. 7ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை நடராஜா் ஆருத்ரா மண்டபத்திற்கு புறப்படும் நிகழ்வும், 8ஆம் திருநாளான புதன்கிழமை மாலை நடராஜா் பச்சை சாத்தி எழுந்தருளுதலும் நடைபெற்றன. 9ஆம் திருநாளான வியாழக்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். 10ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.