திருநெல்வேலி மாநகரப் பகுதிக்குள் கரோனா பரிசோதனை செய்யாமல் விதிகளை மீறி நுழைபவா்கள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து திருநெல்வேலி மாநகரப் பகுதிக்குள் நுழைபவா்களைக் கண்காணிக்க ஏதுவாக மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் சிறப்புச் சோதனைச் சாவடி அமைத்து சோதனை செய்யப்படுகிறது. ஆனால், சிலா் வேறு வழிகளை பயன்படுத்தி கிராமங்களுக்குள் புகுந்து திருநெல்வேலி மாநகரப் பகுதிக்குள் விதிகளை மீறி நுழைவதாக தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்று விதிகளை மீறுபவா்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியவந்தால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு சோதனைகளை சுகாதாரத் துறையினா் மேற்கொள்ள உதவும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.