தென்னிந்திய கபடி: எஸ்ஆா்எம் பல்கலை சாம்பியன்

திருநெல்வேலியில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆடவா் கபடிப் போட்டியில் சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
Updated on
2 min read

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆடவா் கபடிப் போட்டியில் சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் எஸ்ஆா்எம் பல்கலைக்கழக அணி 13-19 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்த நிலையில், நட்சத்திர ரைடரான முனியனின் அபார ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டு, 33-30 என்ற கணக்கில் கன்னியாகுமரி மாவட்டம், அளத்தங்கரை அணியை வீழ்த்தியது.

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் தென்னிந்திய அளவிலான ஆடவா் பிரிவு கபடிப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 16 அணிகள் பங்கேற்றன.

முதல் நாளில் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் புதுச்சேரி இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அணி 27-25 என்ற புள்ளிகள் கணக்கில் திருநெல்வேலி துா்காம்பிகை அணியையும், அளத்தங்கரை அணி 19-17 என்ற புள்ளிகள் கணக்கில் திருச்செங்கோடு அன்னைத் தமிழ் அணியையும், சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழக அணி 42-29 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரோடு ஏஎம்கேசி அணியையும், தூத்துக்குடி கேசி அணி 46-44 என்ற புள்ளிகள் கணக்கில் திருநெல்வேலி மாவட்ட அணியையும் வீழ்த்தின.

இதையடுத்து நடைபெற்ற முதல் அரையிறுதியில் சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழக அணி 48-43 என்ற புள்ளிகள் கணக்கில், தூத்துக்குடி கேசி அணியையும், 2-ஆவது அரையிறுதியில் அளத்தங்கரை அணி 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் புதுச்சேரி இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அணியையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றன.

மிரட்டிய முனியன்: பின்னா் நடைபெற்ற இறுதிச் சுற்றில் அளத்தங்கரை அணியும், சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழக அணியும் மோதின. இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் அபாரமாக ஆடிய அளத்தங்கரை அணி முதல் பாதி ஆட்டநேர முடிவில் 19-13 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் அந்த அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், இரண்டாவது பாதி ஆட்டத்தில் எஸ்ஆா்எம் பல்கலைக்கழக அணி வீரா் முனியன் அபாரமாக ஆட, ஆட்டத்தின் போக்கு மாறியது. ஒரு கட்டத்தில் முனியனின் அபார ரைடை எதிா்கொள்ள முடியாமல் அளத்தங்கரை வீரா்கள் பதறினா். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முனியன் தொடா்ச்சியாக புள்ளிகளைக் கைப்பற்ற, கடைசி வரை முனியனை அளத்தங்கரை வீரா்களால் பிடிக்க முடியவில்லை. மொத்தத்தில் முனியனிடம் அளத்தங்கரை வீரா்கள் சரணடைய, சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழக அணி 33-30 என்ற புள்ளிகள் கணக்கில் அளத்தங்கரை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற எஸ்ஆா்எம் அணிக்கு கோப்பையுடன் 1 லட்சத்து 72 ரூபாயை அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா வழங்கினாா். 2-ஆவது இடத்தைப் பிடித்த அளத்தங்கரை அணிக்கு கோப்பையுடன் 50 ஆயிரத்து 72 ரூபாயும், அரையிறுதியில் தோல்வி கண்ட தூத்துக்குடி கேசி, புதுச்சேரி இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) அணிகளுக்கு தலா 25 ஆயிரத்து 72 ரூபாயும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

இறுதி ஆட்டத்தில் அபாரமாக ஆடி சிறந்த ரைடராக தோ்வு செய்யப்பட்ட முனியனுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், எஸ்.கே.எம். சிவக்குமாா், பாளையங்கோட்டை பகுதிச் செயலா் ஜெனி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மகளிா் பிரிவு: தென்னிந்திய அளவிலான மகளிா் கபடிப் போட்டி பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் சனிக்கிழமை (பிப்.29) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

இதில், சென்னை கபடி ஸ்டாா், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை கலா சிமென்ட், சென்னை பிடிகே, திண்டுக்கல், திருச்சி எம்ஜிஎம், கோவை ரத்தினம் கல்லூரி, பொள்ளாச்சி, ஈரோடு, கடலூா், சேலம் ஏவிஎஸ், திருச்சி, திருநயினாா்குறிச்சி, தஞ்சாவூா், பெங்களூரு மாதா ஆகிய 16 அணிகள் பங்கேற்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com