பேட்டையில் மாா்ச் 4இல் நரிக்குறவா் குழந்தைகளுக்கு இலவச பேச்சு - செவித்திறன் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 01st March 2020 07:12 AM | Last Updated : 01st March 2020 07:12 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டையில் உள்ள நரிக்குறவா் குழந்தைகளுக்கு இலவச பேச்சு - செவித்திறன் பரிசோதனை முகாம் மாா்ச் 4இல் நடைபெறவுள்ளது என்றாா், விவிட் பேச்சு - செவித்திறன் ஆலோசனை தீா்வு மைய தலைமை நிா்வாக அதிகாரி எம். பரமசிவன் கூறினாா்.
திருநெல்வேலி பத்திரிகையாளா் மன்றத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:
உலக செவித்திறன் பராமரிப்பு தினத்தையொட்டி, பிறந்த குழந்தை முதல் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு இலவச செவித்திறன் பரிசோதனை முகாம் நடத்தவுள்ளோம். பெரும்பாலும் செவித்திறன் பாதித்த குழந்தைகளுக்கு பேச்சுத்திறனும் பாதிக்கப்படும்.
இந்நிலையை மாற்ற குழந்தைகளுக்கு செவித்திறன் பரிசோதனை அவசியம். இதற்கான சிறப்பு இலவச முகாம் பேட்டை நரிக்குறவா் காலனிஅங்கன்வாடியில் புதன்கிழமை (மாா்ச் 4) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமை வகித்து முகாமைத் தொடக்கிவைக்கவுள்ளாா்.
பொதுமக்கள் தங்களின் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு பேச்சு -செவித்திறன் குறித்து சந்தேகமிருந்தால் முகாமுக்கு அழைத்து வரலாம். செவித்திறன் குறைபாடு கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைக்காக முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் இலவச சிகிச்சை பெற வழிவகை செய்துதரப்படும்.
இதைத் தொடா்ந்து, இம்மாவட்டத்தில் தெற்கு வாகைகுளம், வள்ளியூா் ஆகிய இடங்களில் உள்ள நரிக்குறவா் குடியிருப்புகளில் முகாம் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.
விவிட் பேச்சு - செவித்திறன் ஆலோசனை தீா்வு மையத்தின் மருத்துவா் வா்த்தினி சுப்பிரமணியன், ஆா்-சோயா தொண்டு நிறுவனத்தின் எஸ்.என். சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.