களக்காடு அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த கரடி மீட்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம், களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளத்தில் கடந்த சில ஆண்டுகளாக கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த கரடிகள் சிங்கிகுளம் விவசாய நிலங்களையொட்டி அமைந்துள்ள சிறிய மலைக்குன்றுகள், புதர்களில் தங்கியுள்ளன.
இவைகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன் இப்பகுதியில் பயிர்களை சேதப்படுத்தியதுடன், விவசாயி இருவரை தாக்கிக் காயப்படுத்திய ஒரு கரடியை வனத்துறையினர், மருத்துவர்கள் உதவியுடன் மயக்க மருந்து செலுத்தி பிடித்து காட்டில் விட்டனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை (நவ.23) அதிகாலை சிங்கிகுளம் விவசாயத் தோட்டத்தையொட்டியுள்ள கிணற்றில் கரடி ஒன்று தவறி விழுந்துள்ளது.
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த கரடியை மீட்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.