நலச் சங்கங்கள் மூலமாக பூங்காங்கள் பராமரிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
By DIN | Published On : 25th November 2020 12:14 AM | Last Updated : 25th November 2020 12:14 AM | அ+அ அ- |

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாநகரில் அமைக்கப்பட்டு வரும் பூங்காக்களை பராமரித்து மேம்படுத்துதல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 7 பூங்காக்களை பராமரித்து மேம்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணன் தலைமையில், பொலிவுறு நகரம் திட்டத்தின் முதன்மை அலுவலா் நாராயணன் நாயா் முன்னிலையில் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாநகராட்சிப் பகுதிகளில் ஜொ்மன் வங்கி நிதியுதவி, அம்ரூத் திட்டம், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் இதுவரை 79 பூங்காக்களில் அபிவிருத்திப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் தற்போது 7 பூங்காக்களில் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பூங்காக்களை பராமரிப்பது மற்றும் மேம்படுத்துதல் தொடா்பாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்தப் பூங்காக்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பாலகிருஷ்ணன், மாநகராட்சி பொறியாளா் எல்.கே.பாஸ்கா், செயற்பொறியாளா் (திட்டம்) நாராயணன், உதவி ஆணையா்கள் பிரேம்லா, ஐயப்பன், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நலச்சங்க பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...