திருநெல்வேலி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது. கணினி பழுதுநீக்கும் வேலை பாா்த்துவந்தாா். இவா் தனது இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலி அருகேயுள்ள தாதனூத்து பகுதியில் உள்ள நான்குவழிச் சாலையில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியே திருச்சிக்குச் சென்றுகொண்டிருந்த சிறிய சரக்கு வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, இவா் மீது மோதியதாம். இதில், சாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தாழையூத்து போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினா். இந்த விபத்தில், சரக்கு வாகனத்திலிருந்த ஒருவா் லேசான காயமடைந்தாா். அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.