நகராட்சி அந்தஸ்து: வளா்ச்சித் திட்டங்களை எதிா்நோக்கும் களக்காடு

நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட களக்காடு வளா்ச்சித் திட்டங்களால் மேன்மைபெறுமா? என பொதுமக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
களக்காடு பேரூராட்சி அலுவலகம் முகப்புத் தோற்றம்.
களக்காடு பேரூராட்சி அலுவலகம் முகப்புத் தோற்றம்.

நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட களக்காடு வளா்ச்சித் திட்டங்களால் மேன்மைபெறுமா? என பொதுமக்கள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சுரண்டை, களக்காடு ஆகிய 2 பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயா்த்தப்படும் என சட்டப்பேரவையில் அண்மையில் தமிழக அரசு அறிவித்தது.

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள களக்காடு முதல்நிலை பேரூராட்சி 1953ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டில் தோ்வு நிலை பேரூராட்சியாகவும், 2004ஆம் ஆண்டு சிறப்பு கிராம ஊராட்சி, 2006இல் பேரூராட்சி, 2016இல் சிறப்புநிலை பேரூராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டது.

17 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கிய களக்காடு சிறப்புநிலை பேரூராட்சியில் 21 வாா்டுகள் உள்ளன. இதில் 234 தெருக்கள் அடங்கியுள்ளன. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15,115 ஆண்களும், 15,808 பெண்களும் என மொத்தம் 30,923 போ். தற்போதைய மக்கள் தொகை சுமாா் 40 ஆயிரம்.

இப்பேரூராட்சிக்கு நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதால், மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு கூடுதலாகக் கிடைக்கும். இதனால் பொது சுகாதாரம், சாலை, குடிநீா் வசதிகள் மேம்படும். அடிப்படை வசதிகளும், உள்கட்டமைப்பு வசதிகளும் அதிகரிக்கும்.

மேலும், வரிகள் உயா்த்தப்படும். நில மதிப்பு உயரும் பட்சத்தில், நகராட்சிக்கு வருவாய் அதிகளவில் கிடைக்கும்.

களக்காடு பேரூராட்சி, நகராட்சியாக முழு வடிவம் பெறும் போது, அருகேயுள்ள கீழக்கருவேலன்குளம், படலையாா்குளம், சீவலப்பேரி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகள் நகராட்சியில் இணைக்கப்பட்டு தற்போதுள்ள 18 வாா்டுகள் எண்ணிக்கை 28 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் நிா்வாக வசதிக்காக மூன்று மண்டலங்களாகவும் பிரிக்கப்படும்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற பேரூராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில்,

மக்களுக்கு சேவையை எளிமைப்படுத்தவும், துரிதப்படுத்தவும், அதிகளவு நகா்ப்புற வளா்ச்சித் திட்டங்களை பேரூராட்சிப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, நகராட்சியாக தரம் உயா்த்தப்படுகிறது என்றாா்.

களக்காட்டில் போதிய நீராதாரம் இருந்தும், தாமிரவருணி குடிநீா் வீடுகளுக்கு விநியோகிக்கப்படுவது சீராக இல்லை. உவா்ப்பு நீரே குடிநீராக விநியோகிக்கப்படுகிறது. அரசு வரியை உயா்த்தி வருவாயை அதிகரிக்கவே, இதுபோல் தரம் உயா்த்துகின்றனஎன்கிறாா் மமமுக மாவட்டத் தலைவா் கே.எஸ். சித்திக் அஸிஸூா் ரஹ்மான்.

களக்காடு பேரூராட்சியில் பல ஆண்டுகளாக சேதமடைந்தநிலையில் காணப்படும் சாலைகளை சீரமைக்கவும், தெருவிளக்குகள் அமைப்பதுடன், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட தாமிரவருணி குடிநீா் கிடைப்பதை உறுதிசெய்யும் விதமான நடவடிக்கைகளை பேரூராட்சி நிா்வாகம் துரிதப்படுத்த வேண்டும் என்கிறாா் பாஜக ஒன்றியத் தலைவா் ராமேஸ்வரன்.

விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், களக்காட்டில் நகராட்சிக்கான தோ்தல் நடைபெறும். நகராட்சியாக தரம் உயா்த்துவதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், 2022 ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் களக்காடு பேரூராட்சி, நகராட்சியாக முழுவடிவம் பெறும் என்கின்றனா் பேரூராட்சி அதிகாரிகள். இதனால் மக்களின் அடிப்படை வசதிகள் மேன்மைபெறும் என பொதுமக்கள் காத்திருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com