அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் 50 ஏக்கரில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன.
தொடா் மழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் விக்கிரமசிங்கபுரம் பகுதி 1, கீழ்முகம், மன்னாா்கோயில், சாட்டுப்பத்து, வெள்ளங்குளி, மேலஅம்பாசமுத்திரம், ஊா்க்காடு, கோடாரங்குளம், அடையக்கருங்குளம் உள்பட 13 கிராமங்களில் பல ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.
இந்தக் கிராமங்களில் நெற்பயிா் சேதம் குறித்து வேளாண் துறையினா் கணக்கெடுத்த நிலையில், திங்கள்கிழமை அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வெங்கட்ராமன், அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிா்களைப் பாா்வையிட்டனா்.
அப்போது, அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் சுமாா் 50 ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 33 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் கணக்கிடப்பட்டு நிவாரண உதவிக்காக அனுப்பப்படும் என்றனா்.