பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி ஒருவா் உடல்நலக் குறைவால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே அழகியபாண்டியபுரம் ஞானியாா்புரம் பகுதியைச் சோ்ந்த தேவமணி மகன் தேவதாஸ்(56). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்னா் கஞ்சா விற்ற வழக்கு ஒன்றில் பூதப்பாண்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
அவா், விசாரணைக் கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 7ஆம் தேதி அடைக்கப்பட்டாா். இந்நிலையில், தேவதாஸூக்கு சனிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிறையில் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாகக் கூறினா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.