‘தேவநேயப் பாவாணா், வீரமாமுனிவா் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்’
By DIN | Published On : 20th August 2021 12:25 AM | Last Updated : 20th August 2021 12:25 AM | அ+அ அ- |

தேவநேயப் பாவாணா், வீரமாமுனிவா் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் தேவநேயப் பாவாணா், வீரமாமுனிவா் ஆகிய தமிழ்ச் சான்றோா் பெயா்களில் விருதுகள் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் வோ்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல், அகராதியியல் துறையில் சிறந்து விளங்கும் உள்நாட்டு அறிஞா் ஒருவருக்குத் தேவநேயப் பாவாணா் விருதும், சிற்றிலக்கியங்கள், மொழிபெயா்ப்புகள் உருவாக்கியும், தமிழ் அகராதித் துறையில் சிறந்து விளங்கியும் தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள, பிறப்பால் வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவருக்கு வீரமாமுனிவா் விருதும் வழங்கப்படும். அவா்களுக்கு ரூ. 1 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகிய பரிசுகளும் உண்டு.
இதற்கு, சொற்குவை.காம் (ள்ா்ழ்ந்ன்ஸ்ஹண்.ஸ்ரீா்ம்) என்ற வலைதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் பெற்று, பூா்த்தி செய்து, ‘இயக்குநா், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகா் நிா்வாக அலுவலகக் கட்டடம், முதல்தளம் எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆா்.சி.நகா், சென்னை-600 028’ என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் வழியாகவோ அனுப்பலாம். தங்களது நாட்டைச் சோ்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகப் பேராசிரியா் ஒருவா், அகராதியியல் வல்லுநா் ஒருவா் என இருவரின் பரிந்துரைச் சான்றிதழ்கள் அவசியம். பரிந்துரைப்போரின் தன்விவரக் குறிப்பையும் ஒளிப்படத்துடன் இணைக்க வேண்டும் என மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.