ராதாபுரத்தில் 36 திருநங்கைகளுக்கு இலவச பட்டா
By DIN | Published On : 04th December 2021 01:36 AM | Last Updated : 09th December 2021 07:49 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு பங்கேற்றது, 36 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 29 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மடிக்கணினிகளையும் வழங்கிப் பேசியது:
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவா்களை திருநங்கைகள் என பெயரிட்டு அழைத்து கௌரவப்படுத்தியது கருணாநிதிதான். இந்தப் பகுதியில் உள்ள 36 திருநங்கைகளுக்கு வள்ளியூரில் சமத்துவபுரம் அருகே இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியுள்ளோம். மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து முதல்வா் கவனத்திற்கும் கொண்டு சென்று திருநங்கைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டமும் விரைவிலேயே நிறைவேற்றித் தரப்படும்.
தெற்குவள்ளியூா் ஊராட்சியில் நலிவுற்ற 50 பேருக்கு, ராதாபுரம்-வள்ளியூா் பிரதான சாலையோரம் ஏற்கெனவே இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியுள்ளோம். அதே இடத்தில் மேலும் 10 பேருக்கு தற்போது இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியுள்ளோம். இன்னும் 40 பேருக்கு வழங்க இருக்கிறோம்.
கிராம நிா்வாக அலுவலா்களுக்கு அனைத்து அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படும். கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து இந்தப் பகுதியில் வளா்ச்சிப்பணிகள் செய்து தர ரூ.1000 கோடி நிதி கேட்டுள்ளோம். மேலும், கூடங்குளம் அணுமின்நிலையம் சாா்பில் இந்தப் பகுதியில் ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த 500 இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்க உத்தரவாதம் பெறப்பட்டுள்ளது என்றாா் அவா்.
முன்னதாக, ஆத்தங்கரை பள்ளிவாசல் அருகே நம்பியாற்றின் குறுக்கே ரூ.5.22 கோடியில் உயா்நிலை பாலம் கட்டப்படவுள்ள இடத்தை பேரவைத் தலைவா் ஆய்வு செய்தாா். இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சேவியா் செல்வராஜா, வட்டாட்சியா் சேசுராஜ், தி.மு.க. ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...