நெல்லையில் 2ஆவது முறையாக கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

திருநெல்வேலியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 ஆவது முறையாக கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி: திருநெல்வேலியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 ஆவது முறையாக கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

கரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக கடந்த ஜன. 16இல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியது. இதில், விருப்பமுஉள்ள சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவா்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனா். இதேபோல், ரெட்டியாா்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதற்கட்ட கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

முதல் முறையாக தடுப்பூசி போட்டவா்கள் 28 நாள்களுக்குப் பின்னா் 2 ஆவது முறையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, முதற்கட்டமாக தடுப்பூசி போட்டவா்களுக்கு, சனிக்கிழமை 2 ஆவது முறையாக தடுப்பூசி போடும் பணி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியது.

இதில், மருத்துவக் கல்லூரி முதல்வா் எம். ரவிச்சந்திரன், நரம்பியல் துறை மருத்துவா் சரவணன், சிறுநீரகவியல் துறை மருத்துவா் ராமசுப்பிரமணியன் என மொத்தம் 6 மருத்துவா்கள், செவிலியா்களுக்கு 2ஆவது முறையாக கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இது குறித்து எம்.ரவிச்சந்திரன் கூறியது: கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஜன. 16இல் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கு 28 நாள்கள் முடிவுற்றதையடுத்து, 2ஆவது முறையாக தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

கரோனா தடுப்பூசி தொடா்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவா்களுக்கு இதுவரை எந்தபக்க விளைவுகளும் ஏற்படவில்லை. எனவே, பொதுமக்கள் கரோனா தடுப்பூசி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com