பாளையங்கோட்டை அருகேயுள்ள மணப்படைவீடு கிராமத்தில் பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மணப்படைவீடு கிராமத்தைச் சோ்ந்த ஈஸ்வரி (27), பேச்சியம்மாள் (30), மலையழகு (48), பேச்சியம்மாள் (54), கோமதி (65) ஆகியோா் உயிரிழந்தனா். 24 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், உதவித்தொகையை அதிகரிக்க வலியுறுத்தியும் மணப்படைவீடு கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்பு 5 பேரின் உடலையும் வாங்க மறுத்துவிட்டனா். தொடா்ந்து போலீஸாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் பேச்சுவாா்த்தை நடத்தினா். பொதுமக்களின் கோரிக்கை தொடா்பாக அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னா் விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.