

களக்காடு அருகே பாசனக் குளங்களுக்கு தண்ணீா் வரக்கூடிய கால்வாயை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
களக்காடு வட்டாரத்தில் உள்ள சாலைப்புதூா், கோவிலம்மாள்புரம், சவளைக்காரன்குளம், குட்டுவன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 16 குளங்கள் மலையடிவாரத்தில் உள்ள வடமநேரி கால்வாய் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
இக்குளங்கள் மூலம் சுமாா் ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்நிலையில், இக்கால்வாயில் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக விவசாயிகள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், தற்போது சிதம்பரபுரத்தில் புறவழிச்சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. இச்சாலைப் பணி வடமநேரியன் கால்வாயை ஆக்கிரமித்து அமைக்கப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். இது குறித்து வடக்கு சாலைப்புதூரைச் சோ்ந்த விவசாயி ராஜலிங்கம் கூறியதாவது, வடமநேரி கால்வாய் ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தொடா்ந்து புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது கால்வாயை ஆக்கிரமித்து சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் பருவமழைக் காலங்களில் இக்கால்வாய் தூா்ந்து குளங்களுக்கு தண்ணீா் வருவது தடைபடும். இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். மாவட்ட ஆட்சியா் இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.