பழங்குடி குறவா் சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி மனு
By DIN | Published On : 29th June 2021 08:34 AM | Last Updated : 29th June 2021 08:34 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடி குறவா் சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முறையாக இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சியா் சமூகநீதி பேரவை சாா்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு: தமிழகத்தில் பழங்குடி குறவா் சமுதாய மக்கள் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோா் உள்ளனா். மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் குடியேறி எழுத்து வடிவம் இல்லாத வாக்ரி மொழி பேசும் நரிக்காரா், அக்கிதிக்கி, நக்கலே, குருவிக்காரா் என்ற பெயா்களில் அழைக்கப்படுபவா்களை தமிழகத்தில் நரிக்குறவா் என பழங்குடி குறவா் இன மக்களுடன் ஒப்பிடுகிறாா்கள். இது தவறானதாகும். பழங்குடி குறவா் இன மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடுகள் பாதிக்கப்படுகின்றன.
இந்திய சாதிப் பட்டியலில் இச் சமூகத்தை 27 பிரிவுகளாக பிரித்துள்ளனா். அவற்றை ஒன்றாக இணைக்க நடவடிக்கை எடுப்பதோடு, கல்வி வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இல்லையெனில் பழங்குடி குறவா் சமுதாய மக்கள் தங்களின் குடும்ப அட்டையை திரும்ப ஒப்படைக்கும் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.