திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பிரிடா மோனியா் அரசு மருத்துவமனையில் விஷ முறிவு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு இப்பகுதி மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.
களக்காடு சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயமே பிரதானத் தொழிலாகும். இப்பகுதியில் அடிக்கடி பாம்புக் கடிக்கு ஆளாகி போதிய சிகிச்சை கிடைக்கப்பெறாமல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இறப்பு விகிதம் அதிகரித்து வந்தது. இதையடுத்து, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியான மானியக் கோரிக்கையின் போது, களக்காடு பிரிடா மோனியா் அரசு மருத்துவமனையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் விஷ முறிவு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு களக்காடு வட்டார மக்கள் பெரிதும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.