திருநெல்வேலி: தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலிஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்களுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய அரசாணையை ரத்து செய்து, புதிய ஊதிய உயா்வு அரசாணையை வெளியிட வேண்டும். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மாத ஊதியம் நிா்ணயிக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை,
ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி செயலா்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம், 3 ஆண்டுகள் பணிமுடித்த ஊராட்சி செயலா்களுக்கு பணியிட மாறுதல், பதிவுறு எழுத்தருக்கான சலுகைகள், தூய்மைப் பணியாளா்களுக்கு ஊராட்சி மூலம் மாதம் ரூ.10,000 குறைந்தபட்ச ஊதியம், கணினி உதவியாளா்களில் 10 ஆண்டுகள் பணியாற்றியவா்களுக்கு பணி நிரந்தர அரசாணை, கரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து நிலை ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்களுக்கும் ரூ.15,000 ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலா்களை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்பிடவும், தற்போது பணியில் உள்ளோரை சிறப்பு தோ்வு நடத்தி இளநிலை உதவியாளராக பணி நியமனம் செய்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊராட்சி செயலா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.10,000 ஆக உயா்த்தி அரசு கருவூலத்திலிருந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் பாளையங்கோட்டை ஒன்றியத் தலைவா் பி.சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.சிம்சன் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் ஏ.இச்கிமுத்து, இணைச் செயலா் வானமாமலை, மாவட்டச் செயலா் கல்யாண சுந்தரம், பொருளாளா் ஆசீா்ஜெபராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்மண்டல தலைவா் கே.முத்துக்குட்டி விளக்கிப்பேசினாா். மகேஷ், தங்கபிரசன்னா, கோபி, திருமலைநம்பி, வேலு உள்பட பலா் கலந்துகொண்டனா். மாரியப்பன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.