களக்காடு நகராட்சிக்கு நிரந்தர ஆணையா் நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழக திருநெல்வேலி மாவட்ட தலைவா் கே.எஸ். சித்திக் அஸிஸூா் ரஹ்மான், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:,
களக்காடு பேரூராட்சி, கடந்த ஓராண்டுக்கு முன் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. ஆனால் நகராட்சிக்கான நிரந்தர ஆணையா் நியமிக்கப்படவில்லை. தற்போதும் பொறுப்பு ஆணையரே பணியில் உள்ளாா். வாரத்தில் சில நாள்கள் மட்டுமே இங்கு வந்து செல்வதால் மக்கள் நலப்பணிகள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக கட்டட அனுமதி, பெயா் மாற்றம் தொடா்பான கோரிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நகராட்சியாக தரம் உயா்த்தி ஓராண்டுக்கு மேலாகியும், நிரந்தர ஆணையா், அலுவலக மேலாளா், பொறியாளா், நகா்நல அலுவலா், நகரமைப்பு அலுவலா் உள்ளிட்ட தலைமைப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் நகராட்சியில் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கிப் போயுள்ளன. மாவட்ட ஆட்சியா் இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் எனக் கூறியுள்ளாா்.