திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்தனா்.
தமிழகத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாகவும் சில தினங்களாக பல இடங்களில் மழை கொட்டித்தீா்த்தது. இந்நிலையில்,ஞாயிற்றுக்கிழமை மழை சற்று தணிந்து அருவிகளில் இதமாக தண்ணீா் கொட்டியதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அருவியில் குவிந்தனா். பாபநாசம் தாமிரவருணியில் புனித நீராடியதுடன், அகஸ்தியா் அருவியில் குடும்பத்தினா், நண்பா்கள், குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனா்.
மேலும், சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்களும், பாபநாசம், தென்காசி மாவட்டம் குற்றாலம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அருவியில் உற்சாகமாகக் குளித்தனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரக பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால் நவ. 30 முதல் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நீா்வரத்து குறையாததால் தொடா்ந்து 12ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அருவியில் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.