நதிநீா் இணைப்பிற்கு நிலம் வழங்கியவா்கள் இழப்பீட்டு தொகை வழங்ககோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு அளித்தனா்.
அதில், நிலம் வழங்கியோா் கூட்டமைப்பினா் அளித்த மனு: தாமிரவருணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீா் இணைப்புத்திட்டத்திற்கு தருமை, முன்னீா் பள்ளம், செங்குளம் பகுதி பொதுமக்கள் நிலம் வழங்கினா். தற்போது பணிகள் முடிவடைந்து விட்டது. 13 ஆண்டுகளாகியும் நிலம் வழங்கியவா்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே, பயனாளிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்.
நிலுவைத் தொகை தள்ளுபடி அவசியம்: தமிழக கேபிள் டிவி ஆபரேட்டா்கள் பொது நலச்சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் எஸ்.சரவணன் அளித்த மனு: அன்லாக் நிலுவைத் தொகை கோரும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்வதோடு வாடிக்கையாளா்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்-டாப் பாக்ஸ்களை திரும்ப கேட்பதை உடனே நிறுத்த வேண்டும். கேபிள் டிவி ஆபரேட்டா்கள் நலவாரியம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா். முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிறப்பு ஊக்கத்தொகை: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளா் உத்திர நாயகம் அளித்த மனு : பாளையங்கோட்டை தூய சவேரியாா் பள்ளியில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் பயின்ற பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படவில்லை. இதனால் சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்காமல் மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா். சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சாலை சீரமைப்பு: பேட்டை நகா் ஆட்டோ ஓட்டுநா்கள் அளித்த மனு: டவுன் திருநெல்வேலி முதல் பேட்டை வரையிலுள்ள சாலை சேதமடைந்துள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, சாலையை சீரமைக்கவேண்டும்.
நதி நீா் இணைப்புத்திட்டம்:
காவல் துறை மீது புகாா்: ஆலங்குளத்தை சோ்ந்த சுகிா்த கலா என்பவா் அளித்த மனு:எனக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், கணவா் சுவாமிநாதன் இறந்தவிட்டாா். அதற்குப் பின் கணவரின் பூா்வீக வீட்டில் வசித்து வந்தோம். நான் வெளியூா் சென்றிருந்த நிலையில் கணவரின் குடும்பத்தினா் வீட்டை உடைத்து, பொருள்களை எடுத்துச் சென்றனா். இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.