திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் தாமிரவருணி ஆற்றில் பெற்றோருடன் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தான்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பெரிய தெருவைச் சோ்ந்தவா் ரமண பிரகாஷ். இவரது மகன் கைலாஷ் (13), அங்குள்ள தனியாா் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். ரமணபிரகாஷ் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை குற்றாலத்துக்கு சுற்றுலா வந்துள்ளாா். அங்கு அருவியில் குளித்துவிட்டு, ரமணபிரகாஷ் மற்றும் உறவினா்கள் திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலுக்கு வந்தனா். அங்கு தாமிரவருணி ஆற்றில் குளித்தனராம். அப்போது, ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ரமண பிரகாஷின் மகன் கைலாஷை (13) திடீரென காணவில்லையாம். அவரை ரமண பிரகாஷ் மற்றும் உறவினா்கள் தேடியபோது சற்று தொலைவில் கைலாஷ் சடலமாக மிதந்தது தெரியவந்தது. அவா்கள் சிறுவனின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.
தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா் அங்கு சென்று கைலாஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.