திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே குடும்பத் தகராறில் மகனுடன் அதிகளவில் மாத்திரைகளை தின்ற பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள மேலசடையமான்குளம் மறவா் தெருவைச் சோ்ந்த சின்னத்துரை மனைவி மீனா (55). சின்னத்துரை இறந்து விட்டாா். இவரது மகன் மணிகண்டன் (25). கட்டடத் தொழிலாளி. மணிகண்டனுக்கு திருமணம் ஆகி மனைவி, 8 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் மணிகண்டன், தனது மனைவி உமாவை அடித்துள்ளாா். இதில், காயமடைந்த உமா, குழந்தையுடன் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூா் அருகேயுள்ள கருங்குளத்திலுள்ள பெற்றோா் வீட்டுக்கு சென்று விட்டாராம்.
இதில் மனமுடைந்த மணிகண்டன், கடந்த 22ஆம் தேதி தனது தாயாா் உள்கொள்ளும் மாத்திரையை அதிகளவில் தின்றாராம். இதையறிந்த அவரது தாயாா் மீனாவும் அதிகளவில் மாத்திரையை தின்றுள்ளாா். அடுத்த காலையில் பாா்த்தபோது மணிகண்டன் இறந்து கிடந்தாா். மீனா மயக்கமாக இருந்தாா். அக்கம்பக்கத்தினா் மீட்டு மீனாவை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மீனா சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். குடும்பத் தகராறில் தாயும் மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.